கோழிகளை கூண்டில் வளர்க்க விதிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவை முற்றிலுமாக ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோழிப் பண்ணையார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைமை அலுவலக கட்டடம், தானியக் கிடங்குகள் திறப்பு விழா மற்றும் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் அருகே களங்காணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஏ.கே.பி. சின்ராஜ் தலைமை வகித்தார். சங்க நிறுவனத் தலைவரும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான ஆர். நல்லதம்பி, அலுவலகக் கட்டடத்தையும், தானியக் கிடங்கையும் திறந்து வைத்தார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (நெக்) நாமக்கல் மண்டலத் தலைவர் பி. செல்வராஜ், சங்கச் செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆண்டகளூர்கேட்டில் உள்ள கோழி நோய் ஆய்வகத்தை முட்டை ஏற்றுமதி செய்வதற்கு உலகத்தரம் வாய்ந்த ஆய்வகமாக மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோயா, கடுகு, சூரியகாந்தி போன்ற புண்ணாக்குகளுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கோழிகளைக் கூண்டில் வளர்க்க விதிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவை முற்றிலுமாக ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
சேலத்தில் திருச்சி செல்ல நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில் இருந்து திருச்சி வரை புறவழிச் சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழிப் பண்ணை புதிதாக அமைப்பதற்கு கட்டட வரைபட அனுமதியை கிராம ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்கு விதிக்கப்படும் சொத்து வரியை, முழுவதுமாக நீக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.