சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியருக்கு குறைந்தபட்சம் ரூ. 7,850 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில மாநாடு நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரப்பிரசாத் வரவேற்றார். சங்க மாநிலப் பொருளாளர் எம்.பாக்கியம் துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் வாழ்த்திப் பேசினார். சங்க மாநில பொதுச் செயலர் இ. மாயமலை வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவு,செலவு அறிக்கை வாசித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலர் ஏ.நிஸார் அகமது, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச்செயலாளர் எம்.முருகேசன், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கி, பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியருக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவப்படி, பொங்கல் போனஸ் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் நிலையில் ரூ. 5 லட்சம் சமையலர் உதவியாளர் நிலையில் ரூ.3 லட்சம் ஒட்டு மொத்தத் தொகையாக வழங்க வேண்டும். 3 மாத தவணையில் ஓய்வூதியம் வழங்குவதை தவிர்த்து மாதம்தோறும் கடைசி தேதியில் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
தணிக்கை தடையில்லாச் சான்று பெறுவதற்கு என சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை மாவட்ட தலைமை இடத்துக்கு அலைக்கழிப்பதை தவிர்க்க வேண்டும். தணிக்கை ஒன்றிய தலைமை இடத்தில் நடைபெறவும், தடையில்லா சான்று அளிக்கும் பொறுப்பை வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அளிக்க வேண்டும்.
அரசு உத்தரவுப்படி ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வாழ்வுறுதி சான்று அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை வாழ்வுறுதிச்சான்று பெறுவதை கைவிட வேண்டும் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.