பள்ளி ஆசிரியர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி முகாம்
மாவட்ட மனநலத் திட்டம் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்வு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது
மாவட்ட மனநலத் திட்டம் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி முகாம் தொடக்க நிகழ்வு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. தினமும் 30 ஆசிரியர்கள் வீதம் 150 ஆசிரியர்களுக்கு வரும் 6-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மன நல ஆலோசகர் ரமேஷ் பேசியது:
மற்றவர்களின் நிலையிலிருந்து யோசிக்கும் பண்பு என்பது உறவு, நட்பு, மேலாண்மை என அறநிலைகளை தவிர்த்து தனிப்பட்ட வகையிலும் ஒருவரின் குணத்தை ஆரோக்கியமாக கட்டமைக்க உதவும். தன்னுடைய பலம், பலவீனம், இயல்பு, ஆர்வம், திறன், திறமையின்மை போன்றவற்றை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தெரியாததைத் தெரியாது என்றும் ஒருவர் ஒப்புக்கொண்டால், அதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் தோன்றும். தெரிந்ததுபோல நடித்தால் அவரால் ஒருநாளும் கற்றுக்கொள்ள முடியாது என்றார். உளவியலாளர் அர்ச்சனா பேசியது:
பிரச்னைகள் குறிக்கோளை பாதிக்கலாம். ஆனால் அச்சப்படாமல் அவற்றை எதிர்கொண்டால் தீர்வு கிடைக்கும். முடிவெடுக்கும் திறன் எல்லோருக்கும் தேவை. சிக்கலான தருணத்தில் முடிவெடுக்கத் தெரியாவிட்டால் வாழ்க்கை நிலைகுலைந்து விட வாய்ப்புள்ளது என்றார்.