பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் மிதிவண்டி மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தைத் திருப்பியபோது ஏற்பட்ட விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த டிராவல்ஸ் மற்றும் தொழில் அதிபர் நிகழ்விடத்திலேயே
பலியானார்.
பெங்களூரு காந்தி நகரைச் சேர்ந்தவர் சதான்சாத்ரா மகன் சுனில்சாத்ரா (50). இவர், பெங்களூரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். தொழில் அதிபருமான இவர், தனது நிறுவனத்துக்கானப் பேருந்துக்குக் கூண்டு அமைப்பதற்காக கரூர் வந்து விட்டு வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் பெங்களூருவுக்கு தனது சொகுசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வாகனத்தை பெங்களூரு, ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த பன்டேயாதவ் ஓட்டி வந்தார். கரூரிலிருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் வந்தபோது சாலையைக் கடக்க மிதிவண்டியில் வந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபுறமாகத் திருப்பியதாகத்
தெரிகிறது.
இதில் சொகுசு வாகனம் சுமார் 300 மீட்டர் தூரம் உருண்டு அங்கிருந்த கட்டட சுவரின் மீது மோதி நின்றது. இதில், சுனில்சாத்ரா நிகழ்விடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த வாகன ஓட்டுநர் பன்டேயாதவ் கரூரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் மிதிவண்டியில் வந்த சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த முனியன் மகன் சுரேஷ் (28), வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த நரசிம்மன் மகன் பிரபாகரன் (18) ஆகிய இருவரும் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.