கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 22-ஆம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 48 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் மணிக்கட்டிபுதூரில் உள்ள சுரபி பல்தொழில்நுட்பக் கல்லூரியில், வரும் 22-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேர்காணல் நடைபெறுகிறது.
தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நேர்காணல் அழைப்பாணை தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். மேலும், நேர்காணல் அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள், தகுந்த ஆதாரங்களுடன் நாமக்கல், கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு புகைப்படத்துடன் வந்து அழைப்பாணை நகலினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.