திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பற்றிய தீயை பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மலையின் பின்புறம் உள்ள வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மரங்கள் தீப்பற்றின. காய்ந்த மரங்களும், சருகுகளும் அதிகளவில் இருந்ததாலும், காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயணைக்கு பணியில் ஈடுபட்டனர்.
தீ பரவலாக எரிந்து கொண்டே இருந்ததால் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. தீயினால் மலையின் வனப் பகுதிகளில் வளர்ந்திருந்த அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் எரிந்தன. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.