நூறாண்டை கடந்தும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்: அமைச்சர் பி.தங்கமணி
நூறாண்டை கடந்தும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும், எதிரியையும், துரோகியையும் வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என்று
நூறாண்டை கடந்தும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும், எதிரியையும், துரோகியையும் வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என்று நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாமக்கல் குளக்கரை திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி.பி.பாஸ்கர் வரவேற்றார். மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று பேசியது: கடந்த மக்களவைத் தேர்தலில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாமிடத்தை பிடித்து இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக அ.தி.மு.க. உருவெடுத்தது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை, சாதாரண தொண்டரும் தலைவராகலாம்.
இந்த ஆட்சி ஒரு மாதத்தில் கலைந்து விடும் என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. ஆனால், இரண்டு ஆண்டைக் கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். நூறாண்டானாலும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க.வுடன், பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. மூத்த தலைவரான ராமதாஸை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். அரசியல் நாகரீகம் கருதி, அவர் கூறியதை சொல்வதற்கில்லை.
15 ஆண்டுகள் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. தமிழகத்துக்கு என்ன செய்தது? கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தபோது கூடா நட்பு; கேடாய் முடிந்தது என கூறினர். தற்போது, அதே காங்கிரஸுடன் தான் கூட்டணி வைத்துள்ளனர். தி.மு.க. லாபக் கணக்குப் போட்டு கூட்டணி வைக்கிறது. ஆனால் நாங்கள் கொள்கை அளவிலேயே கூட்டணி அமைத்துள்ளோம். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். அப்போது தமிழகத்துக்கு பல நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும். பா.ஜ.க, பா.ம.க, அ.தி.மு.க. கூட்டணி வரும் மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும். எதிரியையும், துரோகியையும் வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது. அதற்கு அதிமுக தொண்டர்கள் தயாராக வேண்டும் என்றார்.