மனைவியைக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், அத்தனூர் அருகே ஆலாம்பட்டி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சின்னமணி(42). தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி. சின்னமணி மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து அவரிடம் அடிக்கடி
தகராறு செய்து வந்தார்.
இந் நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பூங்கொடியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி சின்னமணி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னமணியைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோ முன்னிலையில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னமணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சுசீலா ஆஜரானார்.