குழந்தை விற்பனை சம்பவத்தில் சேலம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலிய உதவியாளர் சாந்தி உள்பட மூன்று பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான விசாரணை புதன்கிழமை நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதா சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு அமுதா உள்பட 8 பேரை கைது செய்தனர். சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்ட பின், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலிய உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுக் கலை நிபுணர் ரேகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அமுதாவின் சகோதரர் நந்தகுமார், திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவ் வழக்கில் தொடர்புடைய 11 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், செவிலிய உதவியாளரான சாந்தி, கடந்த வியாழக்கிழமை ஜாமீன் கோரி, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஹெச்.இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வரவேண்டிய சூழலில், ஆய்வுப் பணிக்காக அவர் சென்று விட்டதால், சாந்தியின் மனு மீதான விசாரணை புதன்கிழமை (ஜூன் 12) தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, குமாரபாளையத்தைச் சேர்ந்த இடைத்தரகரான லீலா, திங்கள்கிழமை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மற்றொரு இடைத்தரகரான செல்வி, செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். இந்த மூன்று மனுக்கள் மீதான விசாரணை, புதன்கிழமை காலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், மாவட்ட நீதிபதி ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெறுகிறது.