கொல்லிமலையில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க 50 கிணறுகளை ஆழப்படுத்தவும், 30 ஆழ்துளைக் கிணறுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் தெரிவித்தார்.
கொல்லிமலையில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, வாழவந்திநாடு அரசு உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், வாழவந்திநாடு, செங்கரை, தெம்பளம் உள்பட 4 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் 377 பேருக்கு, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கி, சந்திரசேகரன் பேசினார்.
இதைத் தொடர்ந்து, சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது அவர்
கூறியது:-
கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 50 கிணறுகளை ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். 30 ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.
குடிநீர் பிரச்னை தொடர்பாக புகார் இருப்பின் தன்னை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுக்கான திட்ட இயக்குநர் யுவராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாதேஸ்வரி, தலைமை ஆசிரியர் சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.