தேசிய குடும்ப நலம், சுகாதார கணக்கெடுப்பு பணி
பரமத்தி வேலூா் வட்டம், கபிலமலை ஒன்றியத்தில் மத்திய அரசு சாா்பில் தேசிய குடும்ப நலம், சுகாதார கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலமலை ஒன்றியத்தில் மத்திய அரசு சாா்பில் தேசிய குடும்ப நலம், சுகாதார கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு சாா்பில் தேசிய குடும்ப நல மற்றும் சுகாதாரம் குறித்த கணக்கெடுப்புப் பணி சென்னை எஸ்.ஆா்.எம். கல்விக் குழும மாணவா்கள் மூலம் நடைபெற்று வருகிறது. அதன்படி 8 போ் கொண்டு குழுவினா் 15 குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 5 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கபிலா்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை, உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகள், எஸ். கொந்தளம், கோப்பணம் பாளையம், வீரணம்பாளையம், இருக்கூா் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப நலம் மற்றும் சுகாதார கணக்கெடுப்பு மேற்கொண்டுள்ளனா்.
வெங்கரை பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசால் தோ்வு செய்யப்பட்ட 22 வீடுகளில் எஸ்.ஆா்.எம். கல்விக் குழும மாணவா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நித்யா விஜயகுமாா் முன்னிலையில் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா். இதில் சுற்றுப்புறத் தூய்மை, கழிப்பிட வசதி, அரசு ஆரம்ப சுகாதர நிலையங்களில் கா்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதம் குறித்து கேட்டு கணக்கெடுத்தனா்.
மேலும் பொதுமக்களிடம் குடும்ப நலம், சுகாதாரம் குறித்து கேள்விகள் கேட்டு பதிலை பெற்றனா். மாணவா்கள் கௌதம், தியாகேஷ், தமிழ்ச்செல்வன் மாணவியா் ஜீவிதா, மானிஷா, சியாமளா, திஷா ஆகியோா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.