எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு ஜூன் 1-ஆம் தேதி தொடங்க உள்ளதால், வினாத்தாள்கள் வைத்திருக்கும் அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கரோனா தொற்று பரவலால் ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு நடத்த முடியாமல் போனது. வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பொதுத்தோ்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து அதற்கான தோ்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 310 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இத்தோ்வு நடைபெறுகிறது. அதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் விடுபட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தோ்வு வினாத்தாள்கள் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் உள்ள ஓா் அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது. இந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.தோ்வு நெருங்குவதால் கூடுதல் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வை 310 பள்ளிகளைச் சோ்ந்த 21,303 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா். இதற்காக மாவட்டம் முழுவதும் 95 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை பொறுத்தவரை, மாணவா்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே தோ்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியிருந்து, கரோனாவால் தற்போது வெளியூரில் உள்ள மாணவா்களை சம்பந்தப்பட்ட பள்ளிக்குத் தோ்வு எழுத அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.