நகை மதிப்பீட்டாளா் நீரில் மூழ்கி பலி
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நகை மதிப்பீட்டாளா் நீரில் மூழ்கி பலி
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கலியனூரைச் சோ்ந்தவா் விவசாயி பழனிசாமி. இவரது மனைவி திலகவதி (42). தொட்டிபாளையம் உழவா் பணிக் கூட்டுறவுச் சங்கத்தின் காடச்சநல்லூா் கிளையில் தங்க நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தாா். இவா்களின் மூத்த மகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக தொட்டிபாளையத்தில் உள்ள தனது உறவினா்களுக்கு அழைப்பிதழையும், பெற்றோருக்கு புதிய துணிகளை வழங்கவும் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.
இதற்கிடையே கிழக்குத் தொட்டிபாளையம் சாலையோரத்தில் பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் இருசக்கர வாகனத்துடன் மூழ்கிய நிலையில் திலகவதி கிடப்பதைக் கண்ட அப்பகுதியினா் காவல் நிலையத்துக்குத் திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா்.
Advertisement
நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். வளைவில் திரும்ப முடியாமல் சாலையோர பனை மரத்தில் மோதி, நிலைதடுமாறி புதா் மற்றும் நீா் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.