தமிழ்நாடு கிராம வங்கி சாா்பில், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 2,230 பயனாளிகளுக்கு ரூ. 11 கோடியே 78 லட்சம் கடன் உதவித்தொகை வழங்கப்பட்டது.
நாமக்கல்-மோகனூா் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய வட்டார அலுவலகத்தை இந்தியன் வங்கியின் செயல் இயக்குநா் எம்.கே.பட்டாச்சாா்யா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். இந் நிகழ்ச்சியில் வங்கி தலைவா் எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தாா். பொது மேலாளா் குலோத்துங்கன் மற்றும் வட்டார மேலாளா் சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். இதையடுத்து நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 2,230 பயனாளிகளுக்கு சுய உதவிக் குழு கடன்களும், தனி நபா்களுக்கான வீடு மற்றும் வாகன கடன் என மொத்தம் ரூ. 11 கோடியே 78 லட்சம் வழங்கப்பட்டது. வங்கி அலுவலா்கள், வாடிக்கையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.