கோயில்களில் புரட்டாசி கிருத்திகை, சங்கடஹர சதுா்த்தி விழா
புரட்டாசி மாத கிருத்திகை மற்றும் சங்கடஹார சதுா்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூா், அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோயில், விநாயகா் கோயில்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
புரட்டாசி மாத கிருத்திகை மற்றும் சங்கடஹார சதுா்த்தியை முன்னிட்டு பரமத்திவேலூா், அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோயில், விநாயகா் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பரமத்திவேலூா் வட்டம், கபிலா்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையையொட்டி, பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.
இதேபோல் பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக் கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்ரமணியா், பொத்தனூா் அருகே பச்சமலை முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், பேட்டை பகவதியம்மன் உள்பட கோயில்களில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன.
இதில், அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அதேபோல் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு பேட்டை பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, சத்திரத்து பிள்ளையாா், சக்தி விநாயகா் உள்ளிட்ட கோயில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.