பிரதமரின் வேளாண் திட்டத்தில் மோசடி: விசாரணை நடத்தக் கோரி நாமக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பிரதமரின் வேளாண்மை உதவி திட்ட மோசடி தொடர்பாக விசாரிக்கக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரதமரின் வேளாண்மை உதவி திட்ட மோசடி தொடர்பாக விசாரிக்கக் கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி உதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்போதைய நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே சென்றடைகிறது.
அண்மையில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் இந்த உதவித் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் திட்ட மோசடி தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி பாஜக வினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு அளிக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பாஜக மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் அல்லாதோர் உதவி தொகை பெற்று வருவதை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
விவசாயிகளுக்கு வேளாண் உதவித் தொகை முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகஅரசு கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.