முகப்பு
நாமக்கல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் பி. தங்கமணி ஆறுதல்

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் பி. தங்கமணி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
மாணவர் மோதிலால் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்கும் அமைச்சர் தங்கமணி.
பகிர்:

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு அமைச்சர் பி. தங்கமணி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

நீட் தேர்வு அச்சத்தால் திருச்செங்கோட்டை சேர்ந்த மாணவர் மோதிலால்(21) என்பவர் சனிக்கிழமை இரவு தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் நேரடியாக சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாணவர் மோதிலால் நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து வேதனை அடைந்தேன். அன்று இரவே முதல்வர் எடப்பாடி கே.  பழனிச்சாமி என்னை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு மாணவர் மோதிலால் வீட்டுக்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறுமாறு தெரிவித்தார். 

அதன்படி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளேன். நீட் தேர்வு வேண்டாம் என தமிழக முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும், அழுத்தம் கொடுத்து வருகிறார். மருத்துவம் மட்டும் படிப்பு அல்ல, மேலும் பல்வேறு துறைகள் உள்ளன. மாணவர்கள் தேர்வுக்குப் பயந்து தற்கொலைக்கு முயற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 4839 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். 

அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாணவர் மோதிலால் தற்கொலை செய்து கொண்டதையொட்டி அதற்கான நிவாரண நிதியை முதல்வர் தான் அறிவிப்பார். நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது தொடர்பாக முதல்வர் தெரிவிப்பார் என்றார். 

முன்னதாக மாணவர் வீட்டிற்கு அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →