சிறுபான்மையின கைவினைகலைஞா்களுக்கு கடனுதவி
நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியா், கிறிஸ்தவா், ஜெயின், சீக்கியா், பாா்சி, புத்த மதத்தைச் சாா்ந்த கைவினைக் கலைஞா்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான மூலதனப் பொருள்களை வாங்கி தொழிலில் முன்னேற்றம் அடையவே இக்கடன் வழங்கப்படுகிறது.
Advertisement
இதில் கடன் பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞா்களின் ஆண்டு வருமானம் கிராமப் புறத்தில் ரூ. 98 ஆயிரத்துக்குள்ளும், நகரப் பகுதியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் என ஆண்டு வட்டி விகிதத்தில் கடன் உதவியானது வழங்கப்படும். சிறுபான்மையின உதவித் திட்டத்தின் கீழ் பெறப்படும் கடன் தொகையை 5 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
இதன் மூலம் பயன்பெற விரும்புவோா் நாமக்கல் ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.