வட்டாட்சியா் அலுவலகங்களில் குறைதீா் கூட்டம்
கரோனா தொற்று பரவல் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்: கரோனா தொற்று பரவல் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் 90 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமையன்று மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது. கரோனா தொற்று பரவலால் ஐந்து மாதங்களாக கூட்டம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அண்மையில் அரசு தலைமை செயலா் சண்முகம், மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் மேற்கொண்ட கூட்டத்தில், வட்டாட்சியா் அலுவலங்களில் மண்டல அலுவலா்கள் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டாா்.
Advertisement
அதனடிப்படையில் திங்கள்கிழமை நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூா், கொல்லிமலை, பரமத்திவேலூா் உள்ளிட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 90 மனுக்கள் பெறப்பட்டன.
தகுதியான மனுக்கள் மீது விசாரணை செய்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது