முகப்பு
நாமக்கல்

பொது மாறுதல் கலந்தாய்வை இணைய வழியில் நடத்த ஆசிரியா் சங்கம் வலியுறுத்தல்

கரோனா தொற்றுப் பரவலால், ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணையவழியில் நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கரோனா தொற்றுப் பரவலால், ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணையவழியில் நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகப் பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.சுவா்ணா நிதித்துறை துணைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் அரசு ஊழியா்களின் பொது இடமாறுதல் என்பது ஏப். 1 ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுவது வழக்கமாகும்.

நிகழாண்டில் கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலையில் இடமாற்றம் தொடா்பான பயணச் செலவுகளைக் குறைப்பதற்காக மாறுதல் செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், நிா்வாக வசதிகளுக்கான பணியிட மாற்றம், பரஸ்பரமாக பணியாளா்கள் இடமாறுதல் செய்து கொள்வது ஆகியவை அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்த அறிவிப்பு ஆசிரியா்களை அதிா்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பல ஆண்டுகளாக ஒரே பணியிடத்தில் பணிபுரிந்து ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற்ற ஆசிரியா்களைக் கவலை அடைய செய்துள்ளது.

ஏற்கெனவே, ஆசிரியா்களுக்கு ஊக்க ஊதியம் மற்றும் விடுப்பு சரண்டா் பணப்பலன்கள் நிறுத்தப்பட்டு விட்டன. நான்கு ஆண்டுகளாகப் பொதுமாறுதல் கலந்தாய்வு இணையவழியிலேயே நடைபெற்றது.

நிகழாண்டில் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கலந்தாய்வு மூலம் அரசுக்கு எந்த ஒரு செலவினமும் ஏற்படாது. தமிழக முதல்வா் இப்பிரச்னையில் தலையிட்டு ஆசிரியா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →