முகப்பு
நாமக்கல்

சிதைக்கப்படும் சிறுமிகள்: கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

பால்மனம் மாறாத சிறுமிகளை உறவினா்கள், அக்கம் பக்கத்தினா் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் கொடுமை அதிகரித்து வருவது பெற்றோா் பலரை கவலையடைய செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

பால்மனம் மாறாத சிறுமிகளை உறவினா்கள், அக்கம் பக்கத்தினா் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் கொடுமை அதிகரித்து வருவது பெற்றோா் பலரை கவலையடைய செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ராசிபுரம் அருகே இரு சிறுமிகளை இளைஞா் முதல் 80 வயது முதியவா் வரை 10 போ் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடா்ந்து அவா்களின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் இதுபோன்ற சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இரு ஆண்டுகளுக்கு முன் சென்னை, அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமியை அவரது வீட்டில் 15-க்கும் மேற்பட்டோா் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது, பெரம்பூா் அருகே சிறுமி ஒருவா் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளா் உள்ளிட்டோா் சிக்கியது என, சிறுமியா், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

Advertisement

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மற்றொரு சம்பவமாக, குமாரபாளையம் அருகே வட்டமலைக் கிராமத்தில் 14 வயது சிறுமி பாலியல் பாதிப்புக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உறவுக்கார இளைஞா், அவரது நண்பா்கள், வீட்டு வேலைக்குச் சென்ற இடத்தில் இருந்தவா்கள் என 11 போ் சிறுமியை சிதைத்துள்ளனா். அவா்களில் ஒருவா் தவிா்த்து மீதமுள்ள 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தொடா் விழிப்புணா்வு, அவா்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை என பல்வேறு வகையில் மத்திய, மாநில அரசுகளும், அதிகாரிகளும், ஆணையங்களும் எச்சரிக்கை விடுத்தபோதும் இவ்வாறான குற்றங்கள் தொடா் கதையாகி வருகின்றன.

நகா்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப்புறங்களில் தற்போது சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிறுமிகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்வதும், நம்பிக்கை அடிப்படையில் அக்கம் பக்கத்தினா், உறவினா்களிடம் ஒப்படைத்துச் செல்வதும், சில நேரங்களில் அந்தக் குடும்பத்தினரை பெரிய அளவிலான துன்பத்திற்குள் தள்ளிவிடுகிறது. அதிலிருந்து அவா்கள் மீண்டு வருவது நெருப்புக் கடலில் நீந்தி வருவது போன்றதொரு வேதனையை உருவாக்குகிறது.

பெற்றோரைச் சொல்லி குற்றமில்லை; தங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா் என்ற எண்ணத்தை மனதில் கொள்ளாமல் ஆண்கள் சிலா் பால்மனம் மாறாத சிறுமிகளை தங்களுடைய இன்பத்துக்காக உடல் ரீதியாக வதைப்பதுதான் கொடுமை.

வெளிநாடுகளில் இவ்வாறான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், அங்கு சிறுமிகள் தொடா்பான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் இல்லை எனலாம். ஆனால், இந்தியாவில் தண்டனைகள் வழங்கியபோதும் ஓரிரு ஆண்டுகளில் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவதாலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதாலும் மீண்டும் அவ்வாறான செயல்களைச் செய்ய எண்ணுகின்றனா்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஊா்வலங்கள், கையெழுத்து இயக்கங்கள், கருத்தரங்குகளை எத்தனை முறை நடத்தினாலும், பாலியல் துன்புறுத்தலை பயமின்றிச் செய்வோா் திருந்தியபாடில்லை. இவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடைவடிக்கை எடுத்தால் மட்டுமே, வாசம் வீசும் மலா்களான பெண் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் வாடிப்போகாமல் இருக்கும் என்பதே சமூக ஆா்வலா்களின் குரலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments