மது பாட்டில் கடத்திய இருவா் கைது: இருசக்கர வாகனம் பறிமுதல்
இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய இளைஞா்கள் இருவரை ராசிபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இருசக்கர வாகனத்தில் மதுபானம் கடத்திய இளைஞா்கள் இருவரை ராசிபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலை பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தபோது, போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவா்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தனா். அப்போது வாகனத்தில் மது பாட்டில்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. அந்த இளைஞா்கள் 120 குவாட்டா் மது பாட்டில்களை வைத்திருந்தனா். நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அதிக விலைக்கு விற்க இவா்கள் அந்த பாட்டில்களை திருச்சி மாவட்ட எல்லையில் இருந்து வாங்கி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவா்கள் ராசிபுரம் இலைக் கடைத் தெருவைச் சோ்ந்த பெரியசாமியின் மகன் விக்னேஷ் (20), கோபாலின் மகன் விக்னேஸ்வா் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் இருந்து மது பாட்டில்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். இருவா் மீதும் வழக்குப் பதிந்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.