பொதுமுடக்க விதிமீறல்: நிதி நிறுவனம் உள்ளிட்ட 16 கடைகளுக்கு ரூ.45,000 அபராதம்
பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியாா் நிதி நிறுவனம் உள்ளிட்ட கடைகளுக்கு வருவாய்த்துறையினா் சீல் வைத்து மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.
பரமத்திவேலூா், பாண்டமங்கலம், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியாா் நிதி நிறுவனம் உள்ளிட்ட கடைகளுக்கு வருவாய்த்துறையினா் சீல் வைத்து மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனா்.
பரமத்திவேலூா், பரமத்தி, பொத்தனூா், பாண்டங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கரோனா விதிமுறைகளை மீறி தனியாா் நிதி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கடைகள் செயல்படுவதாக நாமக்கல் ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா சிங் உத்தரிவின்படி பரமத்தி வேலூா் வட்டாட்சியா் சுந்தரவல்லி தலைமையிலான வருவாய் ஆய்வாளா்கள் ஷோபனா மற்றும் மோகன் ஆகியோா் வேலூா், பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூா் மற்றும் வெங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். இதில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு நிதி நிறுவனங்கள், தேநீா்க் கடை, இறைச்சிக் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு சீல் வைத்தும் மொத்தம் ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனா்.
மேலும் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மீதும், முகக் கவசம் அணியாமலும், அத்தியாவசியமின்றியும் சுற்றித் திரிவோா் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனா்.