ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்!
ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ஈரான் தூதர் தெரிவித்துள்ளார்...
ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பாகக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக, இந்தியாவுக்கான ஈரானின் தூதர் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பெரும்பாலான கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகின்றன.
இதையடுத்து, ஹோர்மூஸ் நீரிணையை முழுவதுமாக முடக்கிய ஈரான் படைகள் அவர்கள் அனுமதியின்றி அவ்வழியாக வரும் வர்த்தகம் மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கான ஈரானின் தூதர் முகமது ஃபதாலியிடம் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) ஹோர்மூஸ் நீரிணையை இந்திய கப்பல்கள் பாதுகாப்பாகக் கடப்பதற்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, அவர் கூறியதாவது:
“ஆம். இந்தியாவும் ஈரானும் நண்பர்கள். அதை இன்னும் இரண்டு முதல் மூன்று மணிநேரங்களில் நீங்கள் காண்பீர்கள். இந்தியாவும் ஈரானும் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கின்றன என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க சுமார் 27 இந்திய கப்பல்கள் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஈரான் அளித்துள்ள அனுமதி குறித்து மத்திய அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.