ஆந்திரம்: கலப்பட பால் குடித்து பலியானோர் எண்ணிக்கை 14ஆனது!
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 6 பேர் தற்போது ராஜமகேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அங்கீகாரமில்லாத வியாபாரி விநியோகித்த பாலை அருந்திய சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
உடனே அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி (76) பிப்ரவரி 22ஆம் தேதி பலியானார். இதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வும் நடத்தினா். விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் எனும் நச்சு ரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கணேஸ்வர ராவை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.