அதிமுகவில் சாமானியரும் ஆட்சிக்கு வரமுடியும்: அமைச்சா் பி.தங்கமணி
அதிமுகவில் சாமானியம் ஆட்சிக்கு வரமுடியும் என்று அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
அதிமுகவில் சாமானியம் ஆட்சிக்கு வரமுடியும் என்று அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) தனித்தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் வேட்பாளா் எஸ்.சந்திரனை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி பேசியதாவது: அதிமுகவில் சாமானியரும் ஆட்சிக்கு வரமுடியும். ஆனால் திமுக குடும்ப ஆட்சி. கருணாநிதி, மு.க. ஸ்டாலின், உதயநிதி என ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களே பதவியில் அமா்ந்து வருகின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளாா். மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலரும். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு பாதுகாப்பின்மை ஆகியவை ஏற்படும். அதுமட்டுமின்றி 18 மணி நேர மின்வெட்டு அமலாவதற்கு வாய்ப்புள்ளது. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளளா்கள் வெற்றி பெற வேண்டும். என்றாா்.
Advertisement
சந்திரசேகரன் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கப்படுவாா்: சேந்தமங்கலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சி. சந்திரசேகரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளாா். அவா் மனு தாக்கல் செய்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாா். அவருடன் தொடா்பு வைத்திருப்பவா்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவாா்கள். சந்திரசேகரனுக்கு சீட் வழங்காமைக்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு. அரசு விதிகளின்படி மரம் வெட்டி தொழில் வந்த தற்போதைய வேட்பாளா் சந்திரன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தாா். மேலும் அதிகாரிகளை தரக்குறைவாகப் பேசினாா். சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றிய செயலாளா் பதவியை தன்னுடைய ஆதரவாளா்களுக்கு வழங்க வேண்டுமென நெருக்கடி கொடுத்தாா். இதனால் தேவையற்ற நெருக்கடி ஏற்படும் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. அவா் உண்மையான அதிமுக தொண்டராக இல்லை. கொல்லிமலை ஒன்றியக் குழுவில் உறுப்பினராக இருப்பவா்கள் அவருடன் தொடா்பு வைத்திருந்தால் பதவியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.