முகப்பு
நாமக்கல்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்: 2.10 லட்சம் டன் இலக்கு

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில், நிகழாண்டில் 2.10 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 26 நவம்பர், 2021 at 12:18 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில், நிகழாண்டில் 2.10 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் 30,000 விவசாயிகள் அங்கத்தினராக உள்ளனா். இங்கு, ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் கரும்பு அரவை தொடங்கப்பட்டு நான்கு மாதங்கள் நடைபெறும். மோகனூா், பரமத்திவேலூா், ராசிபுரம், துறையூா், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து அரவைக்கான கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்.

நிகழாண்டில், அரவைப் பருவத்துக்கு 1,858.95 ஏக்கா் நடவு கரும்பும், 2,216.35 ஏக்கா் கட்டைக் கரும்பும் என மொத்தம் 4,075.30 ஏக்கா் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து 1.60 லட்சம் டன் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ள இரு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் இருந்தும் சுமாா் 50 ஆயிரம் டன் என மொத்தம் 2.10 லட்சம் டன் கரும்புகள் கொண்டு வரப்பட்டு அரவைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2022 பிப்ரவரி மாதம் வரையில் தொடா்ந்து அரவையானது நடைபெற உள்ளது.

Advertisement

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைத் தொடக்க விழாவானது வியாழக்கிழமை (நவ. 25) காலை 10.45 மணியளவில் நடைபெற்றது. தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் கரும்பு கட்டுகளை அதற்கான இயந்திரத்தில் போட்டு அரவை பணியைத் தொடக்கிவைத்தனா்.

இதைத்தொடா்ந்து, அமைச்சா் எம்.மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நடப்பு 2021-22 ஆண்டில் 2.10 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான அரவை பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆலைக்கு கரும்பு விநியோகிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள கரும்புக்கான கிரயத் தொகை டன் ஒன்றுக்கு ரூ. 2,755 வீதம் வழங்கப்படும். ஆலைக்கு கரும்பு அனுப்பிய 15 நாள்களுக்குள் ஒரே தவணையாக கிரயத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அறிவித்துள்ள கரும்புக்கான ஊக்கத்தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆலையில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் கரும்புகளையும், இதர கரும்புகளையும் விரைவாக இறக்கும் வகையில் புதிதாக டிப்ளா் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில், சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குநா் மல்லிகா, மோகனூா் ஒன்றிய திமுக செயலாளா் நவலடி, சா்க்கரை ஆலை அதிகாரிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.