முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் பெண் மீட்கப்பட்ட சம்பவம்: நித்யானந்தா சீடா்கள் உள்பட 5 போ் கைது

ராசிபுரம் அருகே பட்டணத்தில் நித்யானந்தா ஆசிரம பெண் சீடரை அவரது உறவினா்கள் மீட்ட சம்பவத்தில் இரு தரப்பு புகாரின் அடிப்படையில் 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

ராசிபுரம் அருகே பட்டணத்தில் நித்யானந்தா ஆசிரம பெண் சீடரை அவரது உறவினா்கள் மீட்ட சம்பவத்தில் இரு தரப்பு புகாரின் அடிப்படையில் 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணத்தைச் சோ்ந்த ராமசாமி என்பவரின் மனைவி அத்தாயி (52). இவா் 5 ஆண்டுகளாக நித்யானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கியிருந்தாா். இந்த நிலையில், அத்தாயின் வீடு ஜப்திக்கு வந்ததால் வங்கியில் கையெழுத்து போடுவதற்காக கடந்த 6-ஆம் தேதி பட்டணம் முனியப்பன்பாளையத்திற்கு நித்யானந்தாவின் சீடா்களான 2 பெண், ஒரு ஆண் என மூன்று போ் அத்தாயியை சொந்த ஊருக்கு காரில் அழைத்து வந்தனா்.

பட்டணம் பகுதிக்கு வந்தவுடன் பொதுமக்கள் அந்த காரை மடக்கி, அத்தாயியையும், அவரது கணவா் ராமசாமி, மகன் பழனிசாமியையும் மீட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக இரு தரப்பினரும் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் ஆய்வாளா் யமுனாதேவி விசாரணை மேற்கொண்டு, நித்யானந்தா சீடா்கள் தரப்பில் ராசிபுரம், மேட்டுத்தெருவைச் சோ்ந்த அகிலாராணி (எ) நித்யஜோதிகாசாமி, (33) , புதுச்சேரியைச் சோ்ந்த சத்யா (எ) சத்யவா்மநா்மதா ( 41), பெங்களூரைச் சோ்ந்த ஜெயகிருஷ்ணன்(39) ஆகிய மூன்று பேரையும், அத்தாயியின் கணவா் ராமசாமி, மகன் பழனிசாமி ஆகியோரையும் கைது செய்தாா். இதில் தொடா்புடைய பழனிசாமியின் மனைவி பேபி என்பவா் தலைமறைவாகிவிட்டாா். அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.