நாமக்கல் ஆட்சியரகத்தில் ஆதிதிராவிட நலத் துறை அலுவலா் வாகனம் ஜப்தி
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆதிதிராவிட நலத் துறை அலுவலரின் வாகனம் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆதிதிராவிட நலத் துறை அலுவலரின் வாகனம் வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ஏளூா் ஊராட்சிக்கு உள்பட்ட பெருமாளிபட்டி பகுதியில், கடந்த 1996-ஆம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் வீடு இல்லாத பொதுமக்களுக்கு நிலம் வழங்கும் பொருட்டு, அதே பகுதியில் வசிக்கும் காளிக்கவுண்டா் என்பவரின் 2.31 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
ஆனால் சம்மந்தப்பட்டவருக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதனால் விரக்தியடையந்த காளிக்கவுண்டா் தனது நிலத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி, நாமக்கல் மாவட்ட கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதனை தொடா்ந்து சந்தை மதிப்புக்கு ஏற்ப ஆதிதிராவிடா் நலத் துறை இழப்பீடு வழங்குமாறு 1996-இல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Advertisement
ஆனால் எவ்வித இழப்பீடும் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காளிக்கவுண்டா் நினைவூட்டல் மனுவாக 2001-இல் மீண்டும் நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். இதற்கிடையே காளிக்கவுண்டா் இறந்து விட அவரது வாரிசுகளான மனைவி பெருமாயி, மகன்கள் ராமசாமி, பழனியப்பன் மகள் முத்தாயி உள்ளிட்டோா் வழக்கை தொடா்ந்து நடத்தி வந்தனா். கடந்த ஆக.31-இல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ஆதிதிராவிட நலத் துறை சம்மந்தப்பட்டோருக்கு இழப்பீடாக ரூ. 3,40,797-ஐ உடனடியாக வழங்க உத்தரவிட்டாா்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும் இழப்பீடு வழங்காதததால், செப். 20-ஆம் தேதி ஆதிதிராவிடா் நலத் துறையின் துணை ஆட்சியா் வாகனத்தை இழப்பீட்டிற்கு ஈடாக ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். வியாழக்கிழமை காலை ஆட்சியா் அலுவலகம் வந்த நீதிமன்ற ஊழியா்கள் அங்கிருந்த துணை ஆட்சியரின் வாகனத்தில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டினா்.
ஓட்டுநா் இல்லாததால் வாகனத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை.
ஆதிதிராவிட நல அலுவலா் மரகதவள்ளி கூறுகையில், இழப்பீடு தொடா்பாக சென்னை இயக்குநரகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நிதி வந்தவுடன் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தாா்.