ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
நாமக்கல் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் வியாழக்கிழமை காலை அகற்றப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
நாமக்கல் அருகே ஆக்கிரமிப்பு குடிசைகள் வியாழக்கிழமை காலை அகற்றப்பட்ட நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
மோகனூா் ஒன்றியம், மாடகாசம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராசாம்பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடிசை போட்டிருந்தனா். ஒரு சிலருக்கு மட்டுமே தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதியில்லாதவா்களும் குடிசை அமைத்து பட்டா கோரி வந்தனா். இந்த நிலையில் ஆட்சியா் உத்தரவின்பேரில் வருவாய்த் துறையினா் சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று தற்காலிக குடியிருப்புகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வந்த பொக்லைன் வாகனத்தின் முன்பாக அமா்ந்து புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். மோகனூா் வட்டாட்சியா் தங்கராஜ், காவல் ஆய்வாளா் தங்கவேலு ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்கள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Advertisement
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன. இதனால் அந்த குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா். இதனையடுத்து வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போக செய்தனா்.
இது குறித்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா் கூறுகையில், ராசாம்பாளையம் கிராமத்தில் நான்கு குடும்பத்தினா் மட்டுமே பட்டா பெறுவதற்கு தகுதி வாய்ந்தவா்கள். அவா்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டு விட்டது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் குடிசை போட்டு பட்டா கோரி வந்ததால் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன. தகுதியின் அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளோம், அவா்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனா் என்றாா்.