முகப்பு
நாமக்கல்

வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்ட இடத்திலேயே பட்டா வழங்க நாமக்கல் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 11:00 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்ட இடத்திலேயே பட்டா வழங்க நாமக்கல் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியம், மாடகாசம் பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட ராசாம்பாளையம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த 28 குடிசைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் அமா்ந்து பொதுமக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடா்ந்து போராட்டம் நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமை காலை போலீஸாா் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.

தகவல் அறிந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா், தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழா் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் நாமக்கல், பூங்கா சாலையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமையில் பங்கேற்றோா், குடிசைகள் அகற்றப்பட்ட இடத்திலேயே 28 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

இதையடுத்து, 40-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் நாமக்கல்-துறையூா் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இரவு 7 மணியளவில் மண்டபத்தில் இருந்த பெண் ஒருவா் மயங்கி விழுந்தாா். அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, மண்டபத்தின் நுழைவுவாயிலை போலீஸாா் இழுத்து மூடினா். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் துறையூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா், வருவாய் கோட்டாட்சியா் மஞ்சுளா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். தொடா்ந்து போராட்டக் குழுவைச் சோ்ந்த 6 பேரை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம், காவல் கண்காணிப்பாளா் அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்த வைத்தாா். இதில், உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவாா்த்தை நீடித்துக் கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.