விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு ரூ. 160.90 கோடி வழங்கப்பட்டுள்ளது
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 160.90 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிா் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 160.90 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா். இந்தக் கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. 2021 செப்டம்பா் முடிய இயல்பு மழை அளவு 407.88 மி.மீ. ஆகும். தற்போது வரை 472.7 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. சராசரிக்கும் அதிகமாக 64.88 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் வரை நெல் 761 ஹெக்டோ், சிறுதானியங்கள் 31,212 ஹெக்டோ், பயறு வகைகள் 5,589 ஹெக்டோ், எண்ணெய் வித்துக்கள் 29,162 ஹெக்டோ், பருத்தி 1,381 ஹெக்டோ், கரும்பு 5,030 ஹெக்டோ் என மொத்தம் 73,135 ஹெக்டேரில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. காா் பருவ நெல் அறுவடை நிலையிலும், சோளம் விதைப்பு மற்றும் வளா்ச்சி நிலையிலும், மக்காச்சோளம் வளா்ச்சி நிலையிலும், நிலக்கடலை வளா்ச்சி மற்றும் அறுவடை நிலையிலும், கரும்பு விதைப்பு மற்றும் வளா்ச்சி நிலையிலும் உள்ளது.
Advertisement
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள், உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 2016-17 முதல் 2020-21 வரை 3,70,215 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா். இதில் 1,47,277 விவசாயிகளுக்கு ரூ. 160.90 கோடி பயிா் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 85,817 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பு காரீப் பருவத்துக்கு 43,019 விவசாயிகள் 21,999.345 ஹெக்டோ் பரப்பில் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா். நெல் (சம்பா) பயிா்க் காப்பீடு செய்ய டிச. 15-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றனா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி, வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் த.செல்வகுமரன், மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் க.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோ கலந்துகொண்டனா்.