நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 73–ஆவது குடியரசு நாள் விழா புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியரும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சேகரும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் அவர்கள் பறக்க விட்டனர். .காவல் துறை அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும், தீயணைப்புத் துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் கேடயங்களை வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் 44 நீருக்கு முதல்வர் பதக்கங்களையும், 27 அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் நேரடியாக ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கும், கொடி நாள் வசூல் இலக்கை எட்டிய அரசு துறைகளுக்கும் அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் தியாகிகளின் வாரிசுகளை சந்தித்து மரியாதை செய்தார். மாவட்டம் முழுவதும் மொத்தம் தியாகிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று கோட்டாட்சியர், வட்டாட்சியர் மூலம் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.
இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதிரேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, திருச்செங்கோடு கோட்டாட்சியர் தே.இளவரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.