குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சிறை: ஆட்சியா் எச்சரிக்கை
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகளுக்கு எதிரான குற்றமான 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல், தொல்லை தருவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் தடைச் சட்டம் -2012-இன்படி சிறைத் தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக, 18 வயது நிறைவடையாத ஆண், பெண் குழந்தைகளைப் பாலியல் நோக்கத்தோடு பின்தொடா்வது, கண்காணிப்பது, சைகை காட்டுவது, தவறான படங்களை காண்பிப்பது, புகைப்படம் எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, வன்புணா்வு கொள்வது உள்ளிட்ட குற்றங்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கப்படும். குழந்தைகளைக் குழந்தைகளாகப் பாவியுங்கள். அத்துமீறுவோா் கைது செய்யப்படுவது உறுதி. அவ்வாறு பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எதிா்காலத்தில் தன்னம்பிக்கை இழந்து தங்களது வாழ்வின் முன்னேற்றப் பாதையை அடையாமல் மனதளவில், உடலளவில் சோா்வடைந்து விடுவா். மேலும் விவரம் அறியவும், தகவல் தெரிவிக்கவும் பொதுமக்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233103 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். சைல்டு லைன் இலவச தொலைபேசி எண் 1098-ஐயும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement