முகப்பு
நாமக்கல்

குமாரபாளையம் பகுதியில் விடிய, விடிய கனமழை: வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
வீடுகளில் புகுந்த மழைநீர்.
பகிர்:

குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடுமையான வெயில் அடித்த நிலையில், இரவு சுமார் 10 மணியளவில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, பின்னர் கனமழையாக மாறியது. இடி, மின்னலுடன் விடிய, விடிய பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மேடான பகுதியிலிருந்து தாழ்வான பகுதிகளை நோக்கி மழைநீர் பெருக்கெடுத்ததால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

கத்தேரி, ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண் நிலங்களிலிருந்து வெளியேறிய மழைநீரும் சேர்ந்ததால் குமாரபாளையம் நகரில் கோம்புப்பள்ளம் நிறைந்து கம்பன் நகர், பாரதி நகர், சத்யா புரி, அபெக்ஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் பொருள்களை மேடான பகுதிக்கு இடம் மாற்றி வைத்தனர். மேலும், பலர் வீடுகளைப் பூட்டிவிட்டு மேடான பகுதிகளுக்கு வெளியேறினர். பல்வேறு பகுதியில் விசைத்தறி பட்டறைகளுக்கும் மழைநீர் புகுந்ததால் நூல் மற்றும் ஜவுளிகள், ஜவுளி உற்பத்தி உபகரணங்கள் சேதமடைந்தன.

மழைநீரில் அடித்து வரப்பட்ட கழிவுகளுடன் புகுந்ததால் வீடுகளுக்குள் சுகாதார சீர்கேடு நிலவியது.  குமாரபாளையம் நகர திமுக அலுவலகம் அருகே உள்ள சிறு பாலத்தில் செடி, கொடிகள் அடைத்துக் கொண்டதால் மழைநீர் பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு வெளியேறியது. கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்த மழைநீர் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கி நின்றது. இதனால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, சுற்றுச்சுவரை உடைத்து மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

குமாரபாளையம் நகராட்சி, பாரதி நகர் தொடக்கப்பள்ளி வளாகத்திலும் மழைநீர் தேங்கி நின்றதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.  மழைநீர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குமாரபாளையம் நகர்மன்றத் தலைவர் விஜயகண்ணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் முகாமிட்டு தண்ணீர் வடிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  மேலும், வெள்ளம் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோன்று குமாரபாளையம் நகர திமுக செயலாளர் எம்.செல்வம் தலைமையில் திமுகவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.  அதிமுக நகரச் செயலாளர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.என்.பழனிச்சாமி, எஸ்.எஸ்.எம்.இ.புருஷோத்தமன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சி.ரவி, சி.ஜி.அர்ச்சுனன் மற்றும் நிர்வாகிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் பகுதியில் விடிய, விடிய பெய்த கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. குமாரபாளையம் நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றவும், சுகாதாரப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.