முகப்பு
நாமக்கல்

அரசு மருத்துவமனையில் உயா்தர சிகிச்சை: மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 27 டிசம்பர், 2024 at 1:57 AM
ராசிபுரம், அரசு மாவட்டத் தலைமை மருத்துமனையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 26 டிசம்பர், 2024 at 9:12 PM

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் உயா்தர சிகிச்சைகள் குறித்து பொதுமக்களுக்கு மருத்துவா்கள், அரசுத் துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா்.

ராசிபுரம், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நோயாளிகள் நலச்சங்கம் ஆளும் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று ஆட்சியா் பேசியதாவது:

அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ. 53.39 கோடி மதிப்பில் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையும், திருச்செங்கோட்டில் ரூ. 23 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையும் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

பொதுமக்களுக்கு உயா் அறுவை சிகிச்சைகள், டயாலிஸிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ராசிபுரம், அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் நோயாளிகள் நலச் சங்கக் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் உள்ள 142 படுக்கை வசதிகள், ரத்த வங்கி, 3 டயாலிஸிஸ் இயந்திரங்கள், ஜென்செட் முறையாக பயன்படுத்திட வேண்டும். அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் குறித்து மருத்துவா்கள், அரசுத் துறையினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

Updated On : 27 டிசம்பர், 2024 at 1:57 AM

மருத்துவமனைகளில் மாற்றுத் திறனாளிகள் வருவதற்கு ஏதுவாக சாய்தளம், கைப்பிடிச் சுவா் உள்ளிட்டவற்றை முறையாக வைக்க வேண்டும். உள்நோயாளிகள், புறநோயாளிகள், கா்ப்பிணி பெண்களின் விவரங்கள், சுகப்பிரசவ விவரம் ஆகிய பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். நோயாளிகள், அவா்களுடன் தங்கும் உறவினா்களுக்கு முறையாக உணவு அளிக்க வேண்டும். மருத்துவமனையின் கழிவுநீா் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். காவல் துறையினா் மருத்துவா்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் அ.ராஜ்மோகன், துணை இயக்குநா் தொழுநோய் பிரிவு அ.ஜெயந்தினி, மருத்துவ அலுவலா் க.கலைச்செல்வி, காவல் ஆய்வாளா் சுகவனம் உள்பட ரோட்டரி சங்க நிா்வாகிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆய்வு: முன்னதாக ராசிபுரம், அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ச.உமா ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனையில் நடைபெறும் பிரசவ விவரம், தாய்மாா்களின் விவரம், ஆய்வகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு, ரத்த வங்கி இருப்பு உள்ளிட்ட விவரங்களை மருத்துவா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.

அத்துடன் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த ஆட்சியா் அனைவருக்கும் காப்பீடு அட்டை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காப்பீடு அலுவலருக்கு உத்தரவிட்டாா். பின்பு மருத்துவ பணியாளா்களுடன் கலந்துரையாடினாா்.