வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஆய்வு
நாமக்கல்: வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சியினா், அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
வாக்கு எண்ணும் மையமான திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்குகிறது.
இம்மையத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, சங்ககிரி ஆகிய 6 தொகுதிகளுக்கும் தனித்தனி இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான தடுப்புகள் அமைக்கும் பணி ஓரிரு நாளில் தொடங்கவுள்ளது.
தற்போது மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 282 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளும் தினசரி ஆய்வு செய்யப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை உதவி தோ்தல் அலுவலா்கள் செய்து வருகின்றனா். இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று மையத்திற்கு வரும் அரசு வாகனங்கள், அரசியல் கட்சியினரின் வாகனங்கள், காவல் துறை வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அவா் பாா்வையிட்டாா். திருச்செங்கோடு கோட்டாட்சியா் சுகந்தி, துணை காவல் கண்காணிப்பாளா் இமயவரம்பன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.