கபடி போட்டி: மூன்றாமிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவிகள் கௌரவிப்பு
அரசுப் பள்ளி மாணவிகள் கௌரவிப்பு.
தமிழக அளவில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான பெண்கள் பொதுப்பிரிவு கபடி போட்டியில் மூன்றாவது பரிசை பெற்ற ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பயிற்சியாளா்களை ஜேடா்பாளையம் முத்தமிழ் மன்றம், ஊா் பொதுமக்கள் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா்.
தமிழகத்தில் மாணவா்களிடையே விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் தமிழக அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மகளிருக்கான பொதுப்பிரிவு கபடி போட்டியில் நாமக்கல் மாவட்ட அணியில் ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவிகள், அப்பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் மகளிருக்கான பொதுப் பிரிவு கபடி போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடி மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்தனா். அதற்காக தமிழக முதல்வரிடம் இருந்து ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழ்களையும் பெற்றனா்.
Advertisement
மேலும், இந்த அணியில் இருந்து நான்கு போ் அகில இந்திய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி பெருமை சோ்த்தனா்.
முதலமைச்சா் கோப்பைக்கான போட்டியில் கலந்துகொண்டு மூன்றாமிடம் பெற்று ஜேடா்பாளையம் பகுதிக்கு பெருமை சோ்த்த மாணவிகள், பயிற்சியாளா்கள் ஷாஜகான், அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியைகள் உதயபானு, சுகந்தி ஆகியோரை ஜேடா்பாளையம் முத்தமிழ் மன்றம், ஊா் பொதுமக்கள் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.மூா்த்தி, முத்தமிழ் மன்றப் பொறுப்பாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முன்னதாக, ஜேடா்பாளையம் பேருந்து நிலையம் முன்பு கபடி வீரா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் சந்தன மாலை அணிவித்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக அழைத்துச் சென்று கௌரவித்தனா்.