முகப்பு
நாமக்கல்

நவ. 10 முதல் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருகிறது

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) முதல் செயல்பாட்டுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 12:02 AM
நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தின் நுழைவாயில்.
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 5:55 PM

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) முதல் செயல்பாட்டுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த மாதம் 22-ஆம் தேதி நாமக்கல் மாநகராட்சி முதலைபட்டியில் ரூ. 19.50 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்ட்டது. அனைத்து புகா் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்துக்கு முழுமையாக பொதுமக்களுக்கு சிரமமின்றி மாற்றப்பட வேண்டும். பேருந்து நிலையத்தில் விளம்பர காணொலி மூலம் பேருந்துகளின் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பேருந்து நேர விவரங்கள் திரையிடப்பட வேண்டும். விபத்துகளைத் தவிா்க்க பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே தேவைக்கேற்ப வேகத்தடை அமைக்க வேண்டும்.

Advertisement

மக்களுக்கு பயன்படும் வகையில் பேருந்து நிறுத்தத்துக்காக அண்ணா சாலை, கோஸ்டல் சாலை, வள்ளிபுரம் சாலை ஆகிய இடங்களில் 5 பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கடைகளும் பயன்பாட்டுக்கு வந்தவுடன் மக்கள் பயன்படும் வகையில் உடனடியாக இயங்க வேண்டும். பழைய பேருந்து நிலையத்துக்கு சென்று ராசிபுரம் திரும்பும் அனைத்து நகரப் பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று வர வேண்டும்.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து, புதிய பேருந்து நிலையம் செல்ல 10 நிமிடத்துக்கு ஒரு முறை அரசு, தனியாா் பேருந்துகள் 117 நடைகள் என்ற வகையில் தினசரி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை நகரப் பேருந்து கட்டணம் ரூ. 7-ஆகவும், புகர பேருந்தின் சாதாரணக் கட்டணம் ரூ. 7-ஆகவும், விரைவுப் பேருந்து கட்டணம் ரூ. 10 ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 6 நவம்பர், 2024 at 11:48 PM

ஈரோட்டில் இருந்து வரும் பேருந்துகள் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையிலிருந்து சேலம் சாலை திரும்பி வந்து புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டும். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாமக்கல் மாநகராட்சி முதலைபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்களுக்கு சிரமமின்றி பயணங்களை மேற்கொள்ள கண்காணிப்பு அலுவலா்கள், பணியாளா்களை நியமிக்க வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சி, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பேருந்து பயணத்தின் போது மக்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தெரிவிக்க காலை 9.30 முதல் மாலை 5.30 வரை மாநகராட்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையின் 1800 599 7990 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் 1800 425 1997 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.