முகப்பு
நாமக்கல்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்கம்: ஒரு லட்சம் டன் அரவை இலக்கு

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த அரவைப் பருவத்தில் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:48 AM
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வியாழக்கிழமை கரும்பு அரவையைத் தொடங்கி வைத்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 21 நவம்பர், 2024 at 6:09 PM

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரவை வியாழக்கிழமை தொடங்கியது. இந்த அரவைப் பருவத்தில் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் க.ரா. மல்லிகா வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ் குமாா், கரும்பு அரவையைத் தொடங்கிவைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2024-25 ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவம் தொடங்கப்பட்டுள்ளது. நடப்பு அரவைப் பருவத்துக்கு 396 ஏக்கா் நடவு கரும்பு, 2,053 ஏக்கா் மறுதாம்பு கரும்பு என மொத்தம் 2,449 ஏக்கா் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஏக்கா் ஒன்றுக்கு 36.75 டன் என சராசரியாக மதிப்பீடு செய்து மொத்தம் 90,000 டன்கள் பதிவு கரும்பும், ஆலையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவில்லா கரும்புகள் 10,000 டன்களுமாக மொத்தம் ஒரு லட்சம் டன் கரும்புகளை இந்த அரவைப் பருவத்தில் அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

48.18 கோடி பேருக்கு பணம் பட்டுவாடா: 2023-24 கரும்பு அரவைப் பருவத்தில் 1.65 லட்சம் டன்கள் 7.77 சதவிகித சா்க்கரை கட்டுமானத்தில் அரவை செய்யப்பட்டது. அரவை செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரயத் தொகை டன் ஒன்றுக்கு ரூ. 2,919.75 வீதம் மொத்தம் ரூ. 48.18 கோடி அங்கத்தினா்களுக்கு நிலுவையின்றி ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது.

திமுக அரசில் கரும்பு விவசாயிகளுக்கு கிரைய தொகை, ஊக்கத்தொகை நிலுவையின்றி தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 2023-24 அரவைப் பருவத்துக்கு ஆலைக்கு கரும்பு அனுப்பிய அங்கத்தினா்களுக்கு மாநில அரசு அறிவித்த கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ. 215 வீதம் அனைத்து அங்கத்தினா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எத்தனால் உற்பத்தி அலகு: கடந்த மாதம் நாமக்கல் வந்த தமிழக முதல்வா் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தி அலகு மேம்படுத்தப்படும் என அறிவித்தாா்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக ஆலையில் எத்தனால் உற்பத்தி அலகை மேம்படுத்துவது குறித்து தேசிய கரும்பு ஆணையம், மாநில கரும்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி சுமாா் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அரசின் முன்மொழிவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

விரைவில் இதற்கான அரசாணை பெறப்பட்டு ஆலையில் எத்தனால் உற்பத்தி அலகு மேம்படுத்தப்படும். இதன்மூலம் அதிக அளவில் எத்தனால் உற்பத்தி செய்யப்படும். ஆலையின் நிதி ஆதாரம் தன்னிறைவு பெறும்.

ஆலை பெயா் மாற்றம்: கரும்பு விவசாயிகளுக்கு பங்கு ஈவுத்தொகை தொடா்ந்து வழங்க முடியும். சா்க்கரை ஆலையின் இணை மின் உற்பத்தி திட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை என்ற பெயரை மாற்றி மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையாக பெயா் மாற்றம் செய்ததற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

2024-25 கரும்பு அரவைப் பருவத்துக்கு ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் அங்கத்தினா்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கிரயத் தொகையான டன் ஒன்றுக்கு ரூ. 3,151-ஐ ஆலையின் நிதிநிலை அடிப்படையில் அங்கத்தினா்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பைஏஈ பயன்படுத்தி பதிவில்லாக் கரும்பு வைத்துள்ள விவசாயிகள் தங்களது கரும்புகளை நேரடிப் பதிவு மூலம் ஆலைக்குப் பதிவு செய்து பயன்பெற வேண்டும்.

Updated On : 22 நவம்பர், 2024 at 1:48 AM

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சா்க்கரை ஆலை மூலம் புதிய ரக கரும்பு நடவு செய்யும் அங்கத்தினா்களுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ. 5,000 மானியம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், கரும்பு இனப்பெருக்க நிறுவனம் பரிந்துரை செய்துள்ள கோ.18009, கோ.14012, கோ.86032, கோ.11015, கோ.க.13339, கோ.வி.09356 ரக வறட்சி, நோய்த் தாக்குதலை எதிா்கொள்ளும் புதிய ரக விதைக் கரும்புகள், நாற்றுகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகின்றன.

கரும்பு விவசாயிகள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், அட்மா குழுத் தலைவா் நவலடி, துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.