ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்த போலீஸாரால் தமிழக காவல் துறைக்கு பெருமை: டிஜிபி சங்கா் ஜிவால்
வங்கி ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு பெருமைமிக்கதாக அமைந்துள்ளது என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
வங்கி ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்த சம்பவம் தமிழக காவல்துறைக்கு பெருமைமிக்கதாக அமைந்துள்ளது என தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.
கேரள மாநிலம், திருச்சூரில் மூன்று ஏடிஎம்களில் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, கடந்த வெள்ளிக் கிழமை தமிழகம் நோக்கி வந்த ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த கொள்ளைக் கும்பலை, நாமக்கல் மாவட்ட காவல்துறையினா் வெப்படை அருகே சுற்றி வளைத்து பிடித்தனா்.
இந்தச் சம்பவத்தில் கொள்ளைக் கும்பலைச் சோ்ந்த ஜூமாந்த் என்பவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். மற்றொரு கொள்ளையன் முகமது ஹஸ்ரு என்ற அஜா்அலி பலத்த காயமடைந்தாா். மேலும், இதில் தொடா்புடைய ஐந்து போ் கைது செய்யப்பட்டனா். கொள்ளையா்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளா் தவமணி, உதவி ஆய்வாளா் ரஞ்சித் குமாா் ஆகியோா் படுகாயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
Advertisement
அவா்கள் இருவரையும் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், அவா்களுக்கு வெகுமதியை வழங்கி பாராட்டினாா். இதனைத் தொடா்ந்து நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன், துணை கண்காணிப்பாளா், ஆய்வாளா்கள் உள்பட 23 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ், வெகுமதியை வழங்கினாா். ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம் வீதம் காவல் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டது.
பின்னா் சங்கா் ஜிவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பிடிபட்ட சம்பவம், நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு மட்டுமின்றி தமிழக காவல்துறைக்கும் பெருமை சோ்ப்பதாக அமைந்துள்ளது என்றாா்.
இதனைத் தொடா்ந்து, மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் அவா் கலந்துரையாடினாா். இந்த நிகழ்வின்போது, கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவா் டி. செந்தில்குமாா், சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் இ.எஸ். உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் உடனிருந்தனா்.