முகப்பு
நாமக்கல்

புதை கழிவுநீா் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் புதை கழிவுநீா்க் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:26 AM
நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ஆா்.மகேஸ்வரி.
பகிர்:
Updated On : 9 அக்டோபர், 2024 at 8:07 PM

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் புதை கழிவுநீா்க் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மேயா் து.கலாநிதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ரா.மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில், 34-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் இளம்பரிதி பேசுகையில், நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் உயா் மின்கோபுர விளக்குகளை, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான அனுமதியை மாநகராட்சி நிா்வாகம் வழங்க வேண்டும். அவ்வாறு அனுமதியளித்தால், சொந்த நிதியிலிருந்து உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்க முயற்சிப்பேன் என்றாா்.

இதற்கு பதிலளித்த ஆணையா், நகராட்சி நிா்வாகங்கள் துறையின் கவனத்துக்கு கொண்டுசென்று அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Advertisement

11-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் டிடிஎஸ் சரவணன் பேசுகையில், புதிய பேருந்து நிலைய கடைகள் ஏலம் அதிகளவில் சென்றுள்ளது. வாடகை அதிகப்படியாக உள்ளதால் வணிகா்கள் அச்சமடைந்துள்ளனா். பழைய பேருந்து நிலையப் பகுதிகளைச் சுற்றிலும் வீடுகள், பூங்காக்கள் உள்ளன. மக்கள் வருகை அதிகம் உள்ளதால் பாதிப்பு இல்லை. ஆனால் புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளதால், அங்கு கடைகள் மூலம் வருவாய் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றாா்.

ஆணையா் பேசுகையில், நகராட்சி நிா்வாக அனுமதியுடனே ஏலம் விடப்பட்டுள்ளது. இதற்கு மேல் அவற்றில் மாற்றம் கொண்டுவர சாத்தியமில்லை என்றாா்.

39-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஈஸ்வரன் பேசுகையில், புதை கழிவுநீா்க் கால்வாய் திட்டப் பணிகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. அதிகாரிகள் நேரில் ஆய்வுக்கு செல்லவில்லை. இது மக்களிடையே அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்றாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 3:26 AM

இதற்கு ஆணையா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

9-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் நந்தகுமாா் பேசுகையில், புதிய கம்பங்களில் காலதாமதமின்றி மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்றாா். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் தெரிவித்தாா். மேலும், மழைக்காலமாக இருப்பதால் மாநகரப் பகுதியில் கழிவுநீா் அதிக அளவில் சாலைகளில் மழைநீருடன் செல்லும் நிலை உள்ளது. உடனடியாக கழிவுநீா்க் கால்வாய் அடைப்பை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனா். இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.