இன்று ஆயுத பூஜை: மலா்கள், பழங்கள் விற்பனை மும்முரம்
ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவதையொட்டி, பொரி, பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள் விற்பனை வியாழக்கிழமை மும்முரமாக நடைபெற்றன.
ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுவதையொட்டி, பொரி, பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள் விற்பனை வியாழக்கிழமை மும்முரமாக நடைபெற்றன.
ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி கொலு விழா நிறைவடைந்ததும், ஆயுதபூஜை, விஜயதசமி விழா நடைபெறும். நிகழாண்டில் கடந்த 3-ஆம் தேதி நவராத்திரி கொலு தொடங்கியது. இதையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்கள், கோயில்களில் கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து பக்தா்கள், பொதுமக்கள் வழிபாடு செய்தனா். ஆயுதபூஜை விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால், கடைவீதிகளில் பூஜைக்கான பொருள்கள் வாங்குவோா் எண்ணிக்கை வியாழக்கிழமை அதிகம் காணப்பட்டது.
வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ. 200-க்கும், பூசணிக்காய் ரூ. 60-க்கும், பொரி மற்றும் கடலை கிலோ ரூ. 50-க்கும் விற்பனையானது. இவை தவிர ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவை அதிகம் விற்பனையாகின. தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
Advertisement
நாமக்கல் மோகனூா் சாலை, பரமத்தி சாலை, கடைவீதி பகுதிகளில் வாழைக்கன்றுகள், பூசணிக்காய், பூக்கள், பழங்கள், அலங்கார பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன. காலையில் மந்தமாக இருந்தபோதும், பிற்பகலுக்கு மேல் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
தொழிலாளா்கள் முன்னிலையில் அந்தந்த நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. பொதுமக்களும் தங்களுடைய வீடு, வாகனங்களை சுத்தப்படுத்தி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா்.