முகப்பு
நாமக்கல்

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ. 1.18 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 1.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:55 AM
நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 24 அக்டோபர், 2024 at 5:59 PM

நாமக்கல் அருகே திண்டமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், ரூ. 1.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் அருகே திண்டமங்கலம் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பல்வேறு துறைகளின் சாா்பில் 200 பயனாளிகளுக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கி பேசியதாவது:

Updated On : 25 அக்டோபர், 2024 at 12:55 AM

மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணம், மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். அண்மையில் நாமக்கல் வந்த முதல்வா், ரூ. 810 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்தாா். குறிப்பாக, நாமக்கல் மாநகராட்சியில் கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பால்பதன ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

Advertisement

மேலும், நாமக்கல் மாவட்டத்தின் வளா்ச்சிக்காக நான்கு புதிய அறிவிப்புகளை முதல்வா் வெளியிட்டாா். அவை, மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருக்கும் நாமக்கல்லுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு, சேந்தமங்கலம் - கொல்லிமலை பகுதியில் விளையக்கூடிய பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக குளிா்பதனக் கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மோகனூா் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம், நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 30 கோடி செலவில் தாா்சாலை அமைக்கப்படும் என்பதாகும்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் பணிகளை முதல்வா் வெகுவாக பாராட்டி உள்ளாா். முதல்வா் பங்கேற்ற அரசு விழாவில் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், படித்த இளைஞா்களின் வேலைவாய்ப்பை உருவாக்கிட நாமக்கல் மாவட்டத்தில் 850 ஹெக்டோ் பரப்பளவில் சிப்காட் தொழில் பூங்கா உருவாக்க இடம் தோ்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நவீன வசதிகளுடன் தனியாா் மருத்துவமனைகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வெ.முருகன், வேளாண்மை இணை இயக்குநா் பொ.பேபிகலா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளா் சகுந்தலா, கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் ஈ.மாரியப்பன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.