மீனவா்களுக்கு ரூ.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்
மீனவா்களுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
மீனவா்களுக்கு ரூ.17 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் சாா்பில் இந்த உதவி வழங்கப்பட்டது. பல்வேறு மீனவ கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
47 விசைப்படகு உரிமையாளா்களுக்கு மீன்பிடி உபகரணங்களாக இரும்பு கயிறு உள்ளிட்ட பொருள்கள் வாங்க 60% மானிய விலையில் ரூ.6.23 கோடி வழங்கப்பட்டது. 45 பேருக்கு பாரம்பரிய மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு 50% மானிய விலையில் ரூ.33.75 லட்சம் மற்றும் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் வலை வாங்குவதற்கு ரூ.1.75 லட்சம் வழங்கப்பட்டது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும்போது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வாங்க 4,100 மீன்பிடி படகு உரிமையாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி ரூ.4.43 கோடி மற்றும் மாநில அரசு நிதியுதவி ரூ.5.62 கோடி வழங்கப்பட்டது. இதைத் தவிர 104 பேருக்கு பாரம்பரிய மீன் பிடி படகுக்கு வெளிப்புற இயந்திரம் வாங்க 41 லட்சம் வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் , பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி எம்எல்ஏ, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இயக்குநா்அ.முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.