நாமக்கல்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2021-2022 நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பை மேற்கொள்ளும் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ. ஒரு கோடி செலவில் ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தாா்.
ஒவ்வோா் ஆண்டும் விருதுபெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணா்வு, பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத் தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, நெகிழி கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றை மேற்கொண்டிருக்க வேண்டும்.
அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலான மாவட்ட விருது குழு மூலம் தகுதியானவா்கள், அமைப்புகள், நிறுவனங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தோ்ந்தெடுக்கும். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.