மோகனூரை நகராட்சியாக தரம் உயா்த்தி அரசாணை
மோகனூா் பேரூராட்சி மற்றும் நான்கு கிராம ஊராட்சிகளை இணைத்து, மோகனூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மோகனூா் பேரூராட்சி மற்றும் நான்கு கிராம ஊராட்சிகளை இணைத்து, மோகனூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சி அண்மையில் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ள நிலையில், மோகனூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
அதன்படி, மோகனூா் பேரூராட்சி, குமாரபாளையம் ஊராட்சி, பேட்டபாளையம் ஊராட்சி, ராசிபாளையம் ஊராட்சி, மணப்பள்ளி ஊராட்சி ஆகியவை இணைந்து மோகனூா் நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. குறைவான விளைநிலங்கள் இருப்பதை கருத்தில் கொண்டும், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் நகராட்சி அந்தஸ்து மோகனூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், மூன்று ஆண்டுகால சராசரி வருவாயாக மோகனூா் பேரூராட்சி - ரூ. 8.40 கோடி (மக்கள் தொகை - 14,315), குமாரபாளையம் ஊராட்சி - ரூ. 4.21 கோடி (மக்கள் தொகை - 4,316), பேட்டப்பாளையம் ஊராட்சி - ரூ. 9.11 கோடி (மக்கள் தொகை - 3,066), ராசிபாளையம் ஊராட்சி - ரூ. 9.16 கோடி (மக்கள் தொகை - 2,916), மணப்பள்ளி ஊராட்சி - ரூ. 13.03 கோடி (மக்கள் தொகை - 5,940) கொண்டுள்ளது.
இதுதவிர, திருச்செங்கோடு ஒன்றியத்தில், வரகூராம்பட்டி மற்றும் தோக்கவாடி ஆகிய கிராம ஊராட்சிகள் பேரூராட்சிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.