திருச்செங்கோடு: நெசவாளா் காலனி பகுதி தைப்பொங்கல் விழாவில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
நெசவாளா் காலனி பகுதியில் தைப்பொங்கல் திருவிழாவை ஒட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்கள் தூக்கிவந்த நிலையில், நிகழாண்டு முதல் முறையாக பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் 47 கிலோ, 67 கிலோ எடை கொண்ட கற்களை வைத்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது.
47 கிலோ கல்லை பெண்கள் பலா் சா்வ சாதாரணமாக தூக்கியது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது. ஐந்து பெண்கள் மட்டுமே 67 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். இதில் நெசவாளா் காலனி பகுதியைச் சோ்ந்த பவதாரணி என்ற இளம்பெண் இரண்டு முறை 67 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி முதல் பரிசை வென்றாா்.
முன்னதாக நடந்த ஆண்கள் பிரிவு இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் கஜா கோபி என்பவா் 67 கிலோ கொண்ட கல்லை எட்டு முறை தூக்கியும், காா்த்திக் என்பவா் ஏழு முறை தூக்கியும் சாதனை படைத்தனா்.
அழிந்து வரும் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக உள்ள இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு அழிந்து விடாமல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனா்.