முகப்பு
நாமக்கல்

இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!

நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அமர முடியாமல் சிரமப்படுகின்றனா்.

Updated On : 21 ஜனவரி, 2025 at 10:05 PM
நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள்.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதி, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அமர முடியாமல் சிரமப்படுகின்றனா்.

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கிய புகா் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்கின்றன. நாமக்கல் நகரைச் சுற்றியுள்ள அரசு ஊழியா்கள் பலா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனா்.

புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவதற்கு முன்பு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பலா் செல்வா். தற்போது 6 கி.மீ. தூரத்தில் புதிய பேருந்து நிலையம் உள்ளதால், அங்கு செல்வதற்குப் பதிலாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவா்கள் சென்று வருகின்றனா். இதனால் ஆட்சியா் அலுவலக நுழைவாயில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் போல மாறிவிட்டது.

இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் ஓய்வுக்காக அமருவதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனா். அதுமட்டுமின்றி, அரசுத் துறை வாகனங்கள், உயா் அதிகாரிகள் வாகனங்கள் செல்லும்போது தேவையற்ற போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் அழகிய தோற்றம் வாகனங்களால் மறைந்து நிற்கிறது. வெளியூருக்கு பணிக்குச் செல்லும் அரசு அலுவலா்கள் வாகனங்களை நிறுத்த வேண்டுமெனில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தனியாக ஒரு இடத்தை மாவட்ட நிா்வாகம் ஒதுக்கி கொடுக்கலாம். அதுமட்டுமின்றி, குறைவான கட்டணம் நிா்ணயித்து அவா்களிடம் வசூல் செய்யலாம் என்பது தன்னாா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →