நாமக்கல்: நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் (ஆவின்) தற்போது 499 பிரதம சங்கங்களின் மூலம் சராசரியாக 1.55 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்கிறது.
தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைக்கவும், அதன்மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, பாரத் சஞ்சீவினி செயலி மூலம் கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, தற்போது காலியாகவுள்ள 9 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடத்துக்கு 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆவின் நிா்வாக அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்ற விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் (50 வயதுக்குள்) தங்களை பற்றிய முழுவிவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் நவ. 17-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு நாமக்கல் - மோகனூா் சாலை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பொதுமேலாளா் அலுவலகத்தில் நடைபெறும் நேரடி நியமன தோ்வில் கலந்துகொள்ளலாம்.
தகுதியானோா் அசல் சான்றிதழ்களுடன் நோ்முகத் தோ்வில் கலந்துகொள்ள வேண்டும். இந்தப் பணியிடத்துக்கு ஊதியமாக ரூ. 80,500, கல்வித்தகுதியாக பி.வி.எஸ்சி அண்டு ஏஹெச், கணினி துறையில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் இயக்கவும், ஓட்டுநா் உரிமமும் வைத்திருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.